சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்றும், சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இரவு 8 மணிக்குள் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அப்படி பணியில் அமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500 ஊதியமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக் குழுவே மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இதனிடையே தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில், திறன் உள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் டெட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தியில்லை என்றால் உடனே பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 4ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post